Saturday, July 23, 2011

மனிதனை விஞ்சிய சக்தி!





ஆண்டவன் படைப்பிலேயே மிக உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பு ஆகும். இதை ஆன்மிகம் மட்டுமல்லாது, அறிவியலும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பூமி இவ்வளவு அரிய கண்டுபிடிப்புகளையும், விண்ணைத் தாண்டி செல்லக்கூடிய ஆற்றலையும் பெற்றது மனிதனால் மட்டும்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பூமியில் மனிதனைத் தாண்டிய ஆற்றலும், வல்லமையும் இந்த பிரபஞ்சத்தில் யாருக்கும் கிடையாது என்ற மமதையை முதல் முதலில் உடைத்தது பறக்கும் தட்டு என்ற இன்றைக்கு வரைக்கும் ஆராய்ச்சிக்குள்ளான ஒரு பொருள்தான்.

1088ஆம் ஆண்டின் இடைப்பட்டப் பகுதி அது. சீன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷென் குயோ. இவர் சிறந்த ஒரு கண்டுபிடிப்பாளர். வித்தியாசமான பொருள், வித்தியாசமான உயிரிகள் இவற்றைப் பற்றியெல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிடுவதுதான் இவரது வழக்கம். அந்த ஆண்டும் அப்படித்தான் ட்ரீம் பூல் என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த கட்டுரை ஏட்டில் ஒரு பக்கத்தில் சீனாவில் ஒரு கிராமப் பகுதியான யாங்க்சௌ என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் அன்ஹூய் மற்றும் ஜியாங்சு என்பவர்கள் தாங்கள் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்த போது, வானத்தில் இருந்து தட்டு போன்ற ஒரு பெரிய பொருள் பறந்து வந்தது. அந்தப் பொருளில் இருந்த கதவுகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்து கண்கூசத்தக்க ஒளி பாய்ந்து வருவதைக் கண்டதாகவும் அதன் நிழல், பத்து மைல் தூரம் வரை நீண்டு இருந்து இருந்ததாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

இந்தக் கட்டுரை வெளிவந்ததும், வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஷென் குயோ மீது கடுமையான எரிச்சல். ஷென் தேவையில்லாமல் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால், இதுகுறித்து ஷென் எந்த பதில் விளக்கமும் அளிக்கவில்லை. தான் கூறியது எந்த விததத்திலும் தவறில்லை என்றே வாதிட்டார். இந்த சம்பவம் எல்லாம் நடந்தது 11 ஆம் நூற்றாண்டு.

ஆண்டுகள் உருண்டோடின. விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்துக்கொண்டிருந்த சமயம் அது. ஆனால், இந்தத் தடவை சீனா அல்ல. இது டெக்ஸாஸ் மாநிலம். 1878ஆம் ஆண்டு. வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டென்னிசன் என்ற தினசரியில் பெரும் பரபரப்பான செய்தி வெளியானது. ஏ ஸ்ட்ரேன்ஜ் பினோமினா (புதுமையான பெயர் தெரியாத உருவம்) என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுருந்தது அந்தப் பத்திரிகை. இதுதான் அன்றைய முதல் பக்கச் செய்தி. அந்தச் செய்தியில் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஜான் மார்ட்டின் என்பவர், தான் வயலில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய கரிய வட்ட வடிவ பறக்கும் பொருள் தான் கண்டதாகவும், அது பலூன் வடிவில் ஒத்திருந்ததாகவும் தன் ஆச்சர்யத்தை வெளியிட்டிருந்தார்.

அதேபோல 1904ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து சரக்குக் கப்பல் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து 300 மைல்கள் மேற்கு முகமாக பயணித்துக்கொண்டிருந்தபோது, மூன்று பிரகாசமான முட்டைவடிவ மற்றும் வட்ட வடிவ பொருள்கள் அணிவரிசையாக வேகமாக பறந்து சென்றதும், பின்னர் தன் போக்கை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார் அக்கப்பல் மாலுமி.

இதையடுத்து தொடர்ச்சியாக 1916 ஆம் ஆண்டு, 1926 என்று ஒவ்வொருவரும் மாறி மாறி தாங்கள் ஒரு அதிசய பறக்கும் தட்டை கண்டதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாகிக்கொண்டிருந்தது. இதன் உச்சக்கட்டமாக இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் போர் விமானங்களைப் பின்பற்றி சில ஒளிப்பந்துகள் தொடர்ந்து பின்பற்றி வந்ததாகவும் செய்திகள் வெளியாயின. 1942ஆம் ஆண்டு வானியல் ஆய்வாளர்கள், அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வான்கலம் அதாவது கண்ணாலும் சரி; ராடாராலும் சரி காண முடியாதபடி கலிபோர்னியா பகுதியில் லாஸ் ஏன்ஜெல்ஸ் மீது பறந்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

வெளியான செய்திகளும், கண்ட காட்சிகளும் உண்மையா? பறக்கும் தட்டு என்ற ஒன்று இருக்கிறதா? அப்படி ஒன்று இருந்தால், அதை இயக்குவது யார்? ஒளியின் வேகத்தில் பறந்து செல்லும் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பை உருவாக்கும் அளவுக்கு மனிதனை விஞ்சிய சக்தி பிரபஞ்சத்தில் இருக்கிறதா என்ற விஞ்ஞானிகளின் மில்லியன் டாலர் கேள்விகளுக்கான பதில் இன்னும் ஆராய்ச்சி வடிவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மனிதனை விஞ்சிய சக்தி ஏன் பூமியைப் போன்ற வேறொரு கிரகத்தில் இருக்கக் கூடாது? சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு கோள்தான் பூமி. விண்ணியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கண்களில் புலப்படாத கோள்கள் இன்னும் ஆயிரம் இருப்பதாக நாசாவே ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த கோள்களையெல்லாம் உற்றுநோக்கும்போது, பூமி மிக மிக சிறிய கோளாகத்தான் தோன்றுகிறது என்பதும் அவர்களின் கருத்து. செவ்வாயிலும், நிலவிலும்தான் மனிதன் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இருக்கின்றன. ஆனால், இன்னும் ஆராய்ச்சிக்குள் சிக்காத பல்வேறு கோள்கள் பிரபஞ்சத்தில் சுழன்று கொண்டுதான் இருக்கின்றது. அதில் ஏதேனும் ஒன்றில் மனிதனை விட ஆற்றலிலும், அறிவிலும் விஞ்சிய உயிரிகள் ஏன் வாழந்துகொண்டு இருக்கக் கூடாது? அந்த உயிரிகளின் கண்டுபிடிப்பாகக் கூட இந்த பறக்கும் தட்டு இருக்கலாம் அல்லவா?

சர்ச்சை மற்றும் ஆராய்ச்சிக்குள் இருக்கும் விடைதெரியாத அத்தனையும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. அதுவும் ஒரு கட்டத்தில் நிஜமாய் உருவெடுக்கலாம். இன்று நாம் பார்த்துக்கொண்டு ரசித்த அவதார் படத்தில் வரும் வேற்று கிரக மனிதர்கள் இன்னும் சில நூறு ஆண்டுகளில் நம் கண்ணிற்கு சகஜமாகத் தோன்றலாம். ஏனென்றால், கண்டுபிடிக்கும் வரைதான் கற்பனை.

இரவு நேரம் நிலவு தோன்றும் வானத்தை உற்றுநோக்கும்போது பல்லாயிர நட்சத்திர கூட்டங்களுக்கு இடையே ஒரு சில நட்சத்திரங்கள் உருகி வேகமாய் நம்மை நோக்கி விரைந்து வந்து விழுவது போல் தோன்றும். யார் கண்டது அது கூட வேற்றுக் கிரகத்தின் பறக்கும் தட்டாய் இருக்கலாம்!

3 comments:

  1. ஹலோ நண்பா மிகவும் அருமையான பதிவு
    பிளாக் உருவக்குவது எப்படி என்பது பற்றி கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
    இப்படிக்கு

    கோகுல் ராஜ்
    gokul820@gmail.com
    பதிவு எழுதும் போது மின்னஞசல் செய்யவும்

    ReplyDelete
  2. உங்களுடைய தளத்தில் பாலியல் செய்திகளை குறைப்பது அல்லது அதனை தனி தலைப்பில் செயல் படுத்துவதால் அனைவரும் படிக்க ஏதுவாக இருக்கும்

    இப்படிக்கு
    உங்கள் பக்கத்து ஊர் நண்பன்
    கோகுல் ராஜ்
    gokul820@gmail.com

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .