Wednesday, February 20, 2019

15 வருடப் பயணத்தை முடித்துக்கொண்ட “Rover”

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய நாசா அமைப்பு அனுப்பிய Opportunity Rover என்ற விண்கலம் தனது 15 வருட பயணத்தை முடித்துக்கொண்டுள்ளது.

2003 ம் ஆண்டு அனுப்பப்பட்ட Opportunity Rover, 2004 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறங்கி செவ்வாய் கிரகத்து இடங்களைப் படம் எடுத்து அனுப்பிக்கொண்டு இருந்தது. செவ்வாய் கிரகச் சூழ்நிலையை, அங்கே என்னென்ன உள்ளது என்பதை அறிய வாய்ப்பாக இருந்தது.
புழுதிப் புயலில் சிக்கிய Rover 
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம், விண்கலம் இயங்க சூரிய ஒளி அவசியம் என்று. 2007 ம் ஆண்டு ஏற்பட்ட புழுதிப் புயலில் சிக்கி மண் படிமத்தால் Opportunity Rover விண்கலம் தொடர்பை இழந்தது, பின் மண் படிமம் விலகி செயல்பட ஆரம்பித்தது.
இதன் பிறகு 2018 வரை பெரிய பாதிப்பில்லாமல், இயங்கிக்கொண்டு இருந்தது.
ஆனால், 2018 ஜூன் மாதம் மீண்டும் ஏற்பட்ட புழுதிப் புயலில் சோலார் தகடுகளில் புழுதி படிமம் படிந்ததால், சூரிய ஒளியைப் பெற முடியவில்லை. இதனால் பூமியில் இருந்து விஞ்ஞானிகளால் Opportunity Rover விண்கலத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நவம்பர் முதல் ஜனவரி வரை செவ்வாய் கிரகத்தில் காற்று அதிகம் இருக்கும் காலம் என்பதால், காற்றின் காரணமாகச் சோலார் தகடுகளில் உள்ள புழுதிப் படிமம் விலகும் என்று காத்து இருந்தார்கள் ஆனால், அது நடக்கவில்லை.
பல முயற்சிகளுக்குப் பிறகு நாசா கடந்த வாரம் Opportunity Rover இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக வருத்தத்துடன் அறிவித்தார்கள்.
243.76 மில்லியன் கிலோமீட்டர்
243.76 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்த Opportunity Rover 15 வருடங்களில் 43 கிலோ மீட்டர் பயணம் செய்து படங்களை அனுப்பி உள்ளது.
243.76 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இதை இயக்கி படம் எடுக்க வைத்து… ஷப்பா .. எனக்குக் கண்ணைக் கட்டுகிறது. வாய்ப்பே இல்லை.. அதுவும் 15 வருடங்கள்.. நினைத்தாலே பிரம்மிப்பாக உள்ளது.
எனக்கு ஒரே ஒரு வியப்பு 15 வருடங்கள் கூடி 43 கிலோமீட்டர் தான் இயக்க வைக்க முடிந்தது என்பது! ஆனால், இந்த 43 கிலோமீட்டர் பயணத்தில் Rover எடுத்துக்கொடுத்த படங்கள், தகவல்களின் மதிப்பு அளவிட முடியாதது.
இதன் படங்கள் வந்த போது இப்பயணத்தில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு எவ்வளவு ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கும் என்பதை நினைத்தாலே பரவசமாக உள்ளது.
சந்தேகம் 
செவ்வாய் கிரகத்தில் புவியீர்ப்பு விசை கிடையாது ஆனால், நாசா வெளியீட்டுள்ள அனிமேஷன் (பின்வரும் காணொளி பார்க்கவும்) உத்தேச காணொளியில் விண்கலம் உள்ள பாதுகாப்பு பந்து கீழ் நோக்கி வந்து பூமியில் பந்து குதிப்பது போல குதிக்கிறது.
இது எப்படி? யாராவது தெரிந்தவர்கள் விளக்கவும்!
தரமான சாதனங்கள்
15 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு விண்கலத்தை அனுப்பிப் படம் எடுக்க வைத்து, இவ்வளவு காலம் அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள் என்றால், தற்போது இது போல ஒன்றை அனுப்பினால் அது எவ்வளவு முன்னேற்றத்துடன் கூடிய தொழில்நுட்பமாக இருக்கும்!
Rover வாகனத்தில் இருந்த சாதனங்கள் 15 வருட பருவ சூழ்நிலையைத் தாக்குப்பிடித்து வேலை செய்துள்ளது என்பதை நினைத்தால், தலை கிறுகிறுக்கிறது.
எவ்வளவு தரமான சாதனங்களாக அவை இருந்து இருக்க வேண்டும்! தற்போது கூட Rover பழுதடைந்து இறுதி மூச்சை விடவில்லை, புழுதிப் படலம் காரணமாகவே செயலிழந்துள்ளது.
உதாரணத்துக்கு யாராவது அங்கே இருந்து, அந்தப் புழுதிப் படிமத்தை துடைத்து விட்டால் திரும்ப வேலை செய்யத் துவங்கி விடும். அவ்வளோ தான்!
எனக்கு எப்போதுமே விண்வெளி சம்பந்தப்பட்டவை வியப்பை அளித்துக்கொண்டே இருக்கும். அதென்னமோ இது சம்பந்தப்பட்ட செய்திகள் தகவல்கள் என்றால், விருப்பமாகப் படிப்பேன்.
Opportunity Rover யைத் தயாரித்து, 15 வருடங்களாக அதைக் கட்டுப்பாட்டில் வைத்து, செவ்வாய் கிரகம் பற்றிய பல்வேறு அறிவியல் தகவல்களை நமக்கு அறியத்தந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும் 🙂 .
கொசுறு
நான் எழுதிய கட்டுரைகளில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளில் “மங்கள்யானும் விண்வெளி ஆச்சர்யங்களும்” கட்டுரை முக்கியமானது.
பலரின் எண்ணங்களைக் கேள்விகளை வியப்புகளை நான் கட்டுரையில் பிரதிபலித்ததாகப் பலர் கருத்திட்டு இருந்தனர். எனக்குச் சிறு மகிழ்ச்சி! 🙂 .
இதில் நண்பர் கௌரிஷங்கர் “விண்கலம் எப்படி விண்வெளியில் செல்கிறது” என்பதை எளிமையாகக் கருத்துப் பகுதியில் விளக்கியிருந்தார். எனக்கு வந்த சிறப்பான எளிமையான கருத்துகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
இதுவரை படிக்கவில்லை என்றால், உங்களுக்கு விண்வெளியில் ஆர்வம் இருந்தால், இக்கட்டுரை படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

போலி ஆப் எச்சரிக்கை.. உங்கள் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம்


AnyDesk என்ற செயலி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதுக்குறித்து RBI வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி இருக்கிறது. இந்தச் செயலியை உங்கள்

தொலைபேசியில் தரவிறக்கம் செய்தால், உங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வாலட் மற்றும் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை யுபிஐ (UPI) மூலம் திருடலாம் எனத்தெரிவித்துள்ளது.

இந்த செயலியை தரவிறக்கம் செய்யும் போது 9 இலக்க கோடு உருவாக்கப்படும். அதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து விவரங்களும் அவர்களால் திருட முடியும். எனவே இந்த செயலியை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த செயலியை பயன்படுவதனை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Monday, February 18, 2019

இந்த அரிய வகை பூவுக்குள் நம் முன்னோர்கள் ஒளித்து வைத்திருக்கும் இரகசியம் என்ன தெரியுமா?


பூமியில் ஆயிர கணக்கான பூக்கள் உள்ளது. சில வகை பூக்கள் ரசிப்பதற்கு மட்டுமே. சில வகை பூக்கள் சூடுவதற்கு மட்டுமே. ஆனால், ஒரு சில பூக்கள் மட்டும் தான் இந்த பூமியில் உள்ள மற்ற ஜீவ ராசிகளுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. உண்மையிலே சில பூவுக்குள் ஆயிரம் ஆயிரம் இரகசியங்கள் இன்றும் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படிப்பட்ட மகிமைகள் நிறைந்த பூக்களின் வரிசையில் தான் இந்த பூவும் சேர்ந்துள்ளது. பலவித மருத்துவ குணங்கள் இந்த பூவில் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படுகின்ற பல்வேறு நோய்களுக்கும் இது தீர்வாக உள்ளது. இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பூவின் பெயரையும் இதனால் நமக்கு கிடைக்கும் ஈடற்ற நன்மைகளையும் இனி அறிந்து கொள்வோம்.
என்ன பூ?
மற்ற பூக்களை போலவே பார்ப்பதற்கு இந்த பூவும் ரம்மியமாக இருக்கும். இதன் இதழ்கள் வெளிர்ந்த வெண்மை நிறத்தை கொண்டிருக்கும். உட்புறத்தில் இளம் மஞ்சளாக இது காணப்படும். இதன் பெயர் தான் நாகப்பூ. இதனை கோவில்களில் நாம் பெரும்பாலும் பார்க்க இயலும்.
மலச்சிக்கல்
மருத்துவ குணம் நிறைந்த பூவை வைத்து தீராத மலச்சிக்கலையும் குணப்படுத்தி விடலாம். மலம் கழிக்கும் போது இரத்தம் ஏற்பட்டால் அதனையும் இந்த பூவை கொண்டு குணப்படுத்தலாம். இதற்கு இந்த பூவை 1 கிராம் அளவிற்கு எடுத்து, அரைத்து கொண்டு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம்.
பாம்பு கடி
பாம்பு கடி ஏற்பட்டால் இந்த பூவின் வேரை வைத்தே விஷத்தை முன்பெல்லாம் முறித்து விடுவர். இதில் உள்ள மருத்துவ குணம் பாம்பின் விஷத்தை உடலில் இருந்து நீக்கும் தன்மை கொண்டதாம். மேலும், சருமத்தில் ஏற்படுகின்ற அரிப்பு, சொரி போன்றவற்றிற்கும் இது தீர்வை தரும்.
குடல் புழு
செரிமான பிரச்சினை கொண்டோருக்கு இந்த நாகப்பூ சிறந்த மருந்தாக செயல்படும். இதை வைத்தே அஜீரண கோளாற்றை குணப்படுத்தி விடலாம். அத்துடன் குடலில் சேர்ந்துள்ள புழுக்களை கொன்று வெளியேற்றி விடும் தன்மை இதற்குண்டு.
சுவாச கோளாறுகள்
சுவாச பிரச்சினை இருந்தால் இந்த பூ உங்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். சளி தொல்லை, இரும்பல், ஜலதோஷம் போன்றவற்றை தீர்வுக்கு இது கொண்டு வரும். அத்துடன் ஆஸ்துமா பிரச்சினைக்கும் இது வழி வகுக்கும்.
மாதவிடாய்
பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் வலிகளை இந்த பூ குறைத்து விடும். மேலும், அதிக அளவில் உதிர போக்கு ஏற்பட்டால் அதை குறைக்கவும் நாகப்பூ போதும். கூடவே பெண்களுக்கான சிலபல மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை இது தீர்க்கவும் உதவும்.
வாத நோய்
வாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் இந்த பூ பயன்படும். இதில் உள்ள மருத்துவ தன்மை வாத நோய்களை மிக எளிதில் தீர்த்து விடும். அத்துடன் உடல் வலிமையையும் இது அதிகரிக்கும் தன்மை கொண்டது.
மன அழுத்தம்
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் சிறந்த தீர்வாக இந்த பூ இருக்கும். மன அழுத்தத்தை குறைத்து இலகுவான நிலையை இது உங்களுக்கு ஏற்படுத்தும்.

கடன் தொல்லை… விடுபடுவது எப்படி? – ஸ்னோபால் வழிமுறைகள்


டன் வாங்குவதற்கு அவமானப்பட்ட காலம் போய், எதற்கெடுத்தாலும் கடன் வாங்குகிற நவீன உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். பர்சனல் லோன் வேண்டுமா, ஹோம் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா என வங்கிகளிலிருந்தும், நிதி நிறுவனங்களிலிருந்தும் அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இ.எம்.ஐ ஆஃபர் மூலம் நிறுவனங்களும் நம்மை கடன் வாங்கத் தூண்டுகின்றன. இந்தக் கடன்கள் மூலம் கிடைக்கும் வசதிகள் குறுகிய காலத்தில் நம்மை மகிழ்ச்சியில் கொண்டாட வைப்பது என்னவோ உண்மைதான். ஆனால், நீண்ட காலத்தில் நம்முடைய நிதி மற்றும் முதலீட்டு வாழ்க்கையைச் சிக்கலாக்கி விடுகிறது என்பதைப் பிறகுதான் உணர்கிறோம்.
குழந்தைகளின் படிப்புக்கு, திருமணத்துக்கு, உங்கள் ஓய்வுக்காலத்துக்கு என வாழ்க்கையின் எந்தவொரு முக்கியமான இலக்குகளுக்கும் முதலீடுகளைத் தொடங்க முடியாமல் கடன் சுமையில் தவிப்பவர்கள் ஏராளம். இப்படிச் சிக்கலில் சிக்கித் தவிக்கும்போதுதான் இந்தச் சிக்கலிலிருந்து விடுபட என்ன வழி என நாம் தேடுகிறோம். 
மாதந்தோறும் செலுத்தும், கடன் தவணைகள் (EMI) இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நாம் அனைவரும் ஏதோ ஒருவிதமான கடனுக்கு கடமைப்பட்டவர்களாகவே இருக்கிறோம். கார் கடன், தனிநபர் கடன், நகைக் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற ஏதாவது ஒரு கடன் தவணையைக் கட்டி கொண்டுதான் இருக்கிறோம். பலர் ஒரே நேரத்தில் பல கடன் தவணைகளை கட்டிக் கொண்டிருப்பார்கள். கடன் தவணைகள் இல்லாத வாழ்க்கை சாத்தியமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
கடன் தவணை இல்லாத வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா என்றால், நிச்சயம் முடியும். இந்தக் கனவை, நனவாக்குவது எப்படி எனப் பார்ப்போம். உலகப் புகழ் பெற்ற முதலீட்டு விஞ்ஞான இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் நிரூபிக்கப்பட்ட ஸ்னோபால் (snowball) வழிமுறையின் மூலம் இதைச் செயல்படுத்தலாம்.
கடன் பனிப்பந்து என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். இது பெரும்பாலும் நிறைய மக்கள் நம்பும் விஷயத்துக்கு எதிரானது. கடனை விட்டு வெளியேற முதலில் அதிக வட்டி விகிதத்துடன் உள்ள பெரிய கடனை முதலில் செலுத்த வேண்டும் / முடிக்க வேண்டும் என்று பலர் நம்புவதற்கு முரணாக இருக்கிறது.
நீங்கள் முதலில் சிறிய கடனைச் செலுத்த தொடங்கும்போதே, உங்களால் உங்களது கடன் பனிப்பந்திற்கு ஓர் உந்துவேகத்தை உருவாக்க முடியும். ஆனால், இந்த நிலை அதிக வட்டியுடன் உள்ள கடனைத்தான் முதலில் செலுத்த வேண்டும், அதன்மூலம்தான் பணத்தைச் சேமிக்க முடியும் என்ற நமது எண்ணத்திற்கும் நம் பாரம்பர்ய ஞானத்திற்கு எதிரானது. உங்களின் எண்ணம் உண்மையாகக்கூட இருக்கலாம்.
ஆனால், நீங்கள் மிகப்பெரிய கடனைக் கட்ட ஆரம்பித்தால், நீங்கள் உங்கள் கணிசமான முனைப்பு மற்றும் உங்கள் உந்துசக்தியை இழக்கக்கூடாது என நினைக்கலாம்; அல்லது  முழுத்தொகைக்குச் செலுத்த நெருங்கும்முன்பே அதனை விட்டுவிட்டுச் செல்லும் நிலையும் ஏற்படலாம். எனவே, உங்களுடைய கடன்களை முழுமையாகச் செலுத்தும்வரை நீங்களே உங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது மிகவும் தேவையான ஒன்று.

* பின்பற்ற வேண்டியவை
கீழே குறிப்பிடப்பட்டிருப்பது, நீங்கள் படிப்படியாகத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய செயல்முறையாகும்.
1. உங்களின் கடன்களை மிகச் சிறியது முதல் பெரியது வரை முதலில் பட்டியலிடுங்கள்.
2. மிகக் குறைவான கடன் தொகையைத் தவிர்த்து, பாக்கி அனைத்துக் கடன் தொகை களுக்கும் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்திவிடவும்.
3. உங்களின் சிறிய கடன் பட்டியலைப் பார்த்து அதில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பணத்தையும் செலுத்திவிடவும்.
4. கடன் முழுமையாகக் கொடுக்கப்படும் வரை ஒவ்வொரு கடனையும் செலுத்தவும். 
5. உங்களுக்கு ஏதாவது கூடுதல் பணம் கிடைத்தால், அதனையும் முதலில் மிகக் குறைந்த கடனைச் செலுத்துவதற்கு இதே முறையைப் பயன்படுத்துங்கள்.
உதாரணத்தைக் கவனியுங்கள்
நாம் ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு, அது எப்படி நமக்கு வேலை செய்கிறது அல்லது உதவுகிறது என்று பார்ப்போம். உங்களிடம் கீழே குறிப்பிட்டுள்ள படி, நான்கு வகையான கடன்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம்.
1) கிரெடிட் கார்டு கடன் ரூ.25,000 –  அதன் வட்டி 18 சதவிகிதத்துடன் மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தவணை தொகை ரூ.1,250 
2). மற்றொரு கிரெடிட் கார்டு கடன் ரூ.50,000 – அதன் வட்டி 24 சதவிகிதத்துடன், மாதாந்திரத் திருப்பிச் செலுத்தும் தவணைத் தொகை ரூ.2,500 
3) கார் கடன் ரூ.3,00,000 – இதன் கெடுகாலம் நான்கு ஆண்டுகள். ஆனால், நான்கு வருட காலத்திற்குள் 9% வட்டி விகிதத்துடன் மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தவணைத் தொகை ரூ.6,750.
4) கல்விக் கடன் ரூ.7,50,000. வட்டி விகிதம் 5%. ஒரு வருடத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகை ரூ.7,950

செயல்திட்டம்
நீங்கள் மேலே குறிப்பிட்ட நிலுவையிலுள்ள ஒவ்வொரு கடனுக்கும் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இதில், அத்துடன் கூடுதலாக, முதல் கடனான கிரெடிட் கார்டு கடனைச் செலுத்தி முடிக்க வேண்டும். அதற்கு குறைந்தபட்சத் தொகையாக ரூ.5,000 கூடுதலாகச் சேர்க்க வேண்டும். மாதாந்திரத் தவணைத் தொகை ரூ.1,250 மற்றும் ரூ.5,000 சேர்த்து ரூ.6,250 செலுத்தினால் நீங்கள் நான்கு மாதங்களில் முதல் கடனைச் செலுத்தி முடிக்க முடியும்.
அடுத்து, இரண்டாவது கடனான கிரெடிட் அட்டைக்குக் கவனம் செலுத்தி, அதற்கும் மாதம் ரூ.8,750 செலுத்தலாம் (கூடுதலாகச் செலுத்தும் ரூ.5,000, முதல் கடனுக்கான தவணைத் தொகை ரூ.1,250 மற்றும் இந்தக் கடனுக்கான தவணைத் தொகை 2,500). ஐந்து மாதங்களில் இரண்டாவது கடனைச் செலுத்தி முடித்துவிட முடியும்.
அடுத்து கார் கடனுக்கு நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ.15,500 (ரூ.8,750 மற்றும் கார் கடனுக்கான மாதாந்திரத் தவணைத் தொகை ரூ.6,750) செலுத்த முடியும். கார் கடன் 15 மாதங்களில் முழுமையாகச் செலுத்தி முடிக்கப்பட்டுவிடும். மூன்று கடன்களை முடித்தபிறகு உங்களுக்கு ஓரளவு நம்பிக்கையும் நிம்மதியும் கிடைத்துவிடும்.
அடுத்து, கல்விக் கடன் மட்டுமே. மாதந்தோறும் ரூ.23,450 செலுத்தினால் (ரூ.15,500 மற்றும் கல்விக் கடனுக்குச் செலுத்தும் மாதாந்திரத் தொகை ரூ.7,950),  நீங்கள் அடுத்த 24 மாதங்களில் கடன்களில் இருந்து விடுபடுவீர்கள்.
முனைப்புடன் கவனம் செலுத்தி, உங்களுடைய மிகச் சிறிய கடன் தொகையில் தொடங்கி, பெரிய தொகையைச் செலுத்தி முடித்துவிட்டீர்கள்.
நீங்கள் ஊக்கம் தேவைப்படும் நபராக இருந்தால், உங்களுக்கு ஸ்னோபால் முறையே சரியான வழிமுறையாக இருக்கும். எல்லாக் கடன்களையும் செலுத்தி முடித்து நிம்மதியாக இருக்க இது உதவும். 

இனி உங்களின் இதர தேவைகளுக்கான செலவுகளை சுலபமாகச் செய்ய முடிவதுடன், எதிர்கால இலக்குகளுக்குத் தேவையான முதலீடுகளையும் மேற்கொள்ள முடியும்.

ப.சரவணன், பேராசிரியர், ஐ.ஐ.எம், திருச்சி

தொப்புள் கொடி வழியே வரும் தொற்று!


பிறந்தது முதல் ஐந்து வயது வரை, எலும்பு – மூட்டுகளில் ஏற்படும் தொற்று பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை.

பிறந்தவுடன் குழந்தைகளுக்கு ஏற்படும், இது போன்ற தொற்று, தொப்புள் கொடி வழியே பரவும். சில சமயங்களில், அம்மாவின் பிறப்புறுப்பில் உள்ள தொற்று குழந்தையை பாதிக்கலாம். பிறந்த குழந்தைக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும்; அதனால்,தொற்று எளிதாக ஏற்படுகிறது.
ஒரு வயது, இரண்டு வயதில், ஜலதோஷம், காதில் சீழ், மார்புச் சளி, சிறுநீர் தொற்று ஏற்பட்டால், பாக்டீரியாக் கிருமிகள் ரத்தத்தில் பரவி, எலும்பு, மூட்டுக்களுக்கும் பரவலாம்.

ஒரு வயதிற்கு மேல், குழந்தை ஓடியாடி விளையாடும் போது, மென்மையான கால்கள், பாதங்களில், அடிபட்டால் ஏற்படும் காயங்கள் வழியே, கல், மண் உள்ளே செல்வதால் ஏற்படும் தொற்றுக் கிருமிகள், ரத்தத்தின் வழியே, எலும்பு, மூட்டுகளையும் பாதிக்கலாம்.

எலும்பு வலுப்பெற…

குழந்தை, ஓடியாடி விளையாடுவது, அதிலும் சூரிய ஒளியில் விளையாடுவது மிகவும் அவசியம். அப்போது தான், வைட்டமின் – டி கிடைத்து, கால்சியம் சத்தை, முழுமையாக உடல் கிரகிக்கும். கால்சியம் நிறைந்த, சமச்சீரான ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும்.

எப்படி கண்டுபிடிப்பது?

காய்ச்சல் இருக்கும் சமயத்தில், கை, கால்களை உதைத்து விளையாடிய குழந்தை, அசையாமல் இருப்பது, திடீரென்று நடக்க முடியாமல் போவது, மூட்டுக்களை தொட்டவுடன் வலியால் அழுவது ஆகியவை, உடனடியாக கவனிக்க வேண்டியவை. 

தொற்று காரணமாக, குழந்தையின் மூட்டுகளில், சீழ் பிடித்தால், 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்து, தேவையான சிகிச்சை தர வேண்டும். இல்லையென்றால், மூட்டு முழுவதும் கெட்டுப் போய், வாழ்நாள் முழுவதும் முடமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

துவக்கத்திலேயே சிகிச்சை செய்தால், மருந்தினாலேயே குணப்படுத்த முடியும். பிரச்னை பெரிதானால், அறுவை சிகிச்சை செய்து, சீழ் முழுவதையும் அகற்றி, மருந்து தர வேண்டும்.

டாக்டர் ஆர்.சங்கர், குழந்தைகள் எலும்பு, மூட்டு மருத்துவர், சென்னை.

உடலை பாதுகாக்கும் பருப்புகள்


உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
துவரம் பருப்பு: இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.
பாசிப்பருப்பு: விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும். 

பச்சை பயறு: புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து  குறைய உதவியாக இருக்கும்.கொண்டைக்கடலை:  கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு: இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும். 

சுண்டல்: கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும். 

கடலைப் பருப்பு: ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும்  இதய நோய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும். 

சிவப்பு காராமணி: பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும். இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.

தட்டை பயறு: தட்டை பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு: இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.

பாத்திரமறிந்து சமையல் செய் !


பாத்திரமறிந்து பிச்சை இடு’ என்று தானம் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஆலோசனை சொல்லும் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல், சமையல் செய்யும் பாத்திரத்திலும் சூட்சுமம் உண்டு.

நவீனத்தின் மீது மோகம் கொண்ட நாம் பார்க்க ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காகவே மைக்ரோவேவ் ஓவன், சப்பாத்தி மேக்கர் மற்றும் நான் ஸ்டிக் குக் வேர் என சமையலறையில் புதிதுபுதிதான பொருட்களை அதிகமாக உபயோகிக்கிறோம். மேலும், அரிசி, பருப்பு வகைகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமிக்கும் பழக்கம் வந்துவிட்டது.

முன்பெல்லாம் சில்வர் டப்பாக்கள், தகர டின்களை பயன்படுத்தி வந்தார்கள். நம் நாட்டு உணவு மரபுகள் ஆச்சரியமானவை. அதில் ஒன்று, நாம் பாரம்பரியமாக சமையலுக்கு பயன்படுத்தும் இரும்பாலான சட்டி, கடாய், ஈயச்சொம்பு போன்ற பாத்திரங்கள். இந்த இரும்பு பாத்திரங்களில் சமைத்த உணவை உட்கொண்டு வந்ததாலேயே நம் முன்னோர்களுக்கு, இப்போது இருக்கிற மாதிரி ரத்தசோகை வந்ததில்லை.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது எண்ணெயின் அளவு மிகக் குறைவாகத்தான் தேவைப்படும். அதனால், கொழுப்பு சேராது என்று நினைத்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் PFOA (Perfluorooctanoic Acid) என்ற வேதிப்பொருள் தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவது இல்லை. எனவே, இந்த வகைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். லைப்போபுரோட்டீன் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

மாறாக, இரும்பு பாத்திரங்களில் சமைக்கும் நேரம் அதிகம் எடுத்துக் கொள்வதோடு, உணவின் ஊட்டச்சத்துக்களை வெளியேறாமல் தக்கவைத்துக் கொள்கிறது. உடல் வெப்பத்தை தணிக்கிறது. மேலும், சமைக்கும்போது, பாத்திரங்களில் இருக்கும் இரும்பு வெளிப்பட்டு, உணவில் கலந்து, நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதை ஆய்வும் உறுதிப்படுத்துகிறது. அதனால், வாரத்திற்கு 2, 3 முறையாவது இரும்பு சட்டியில் சமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், கூடுதலாக இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்காது.