Monday, February 18, 2019

பாத்திரமறிந்து சமையல் செய் !


பாத்திரமறிந்து பிச்சை இடு’ என்று தானம் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஆலோசனை சொல்லும் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல், சமையல் செய்யும் பாத்திரத்திலும் சூட்சுமம் உண்டு.

நவீனத்தின் மீது மோகம் கொண்ட நாம் பார்க்க ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காகவே மைக்ரோவேவ் ஓவன், சப்பாத்தி மேக்கர் மற்றும் நான் ஸ்டிக் குக் வேர் என சமையலறையில் புதிதுபுதிதான பொருட்களை அதிகமாக உபயோகிக்கிறோம். மேலும், அரிசி, பருப்பு வகைகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமிக்கும் பழக்கம் வந்துவிட்டது.

முன்பெல்லாம் சில்வர் டப்பாக்கள், தகர டின்களை பயன்படுத்தி வந்தார்கள். நம் நாட்டு உணவு மரபுகள் ஆச்சரியமானவை. அதில் ஒன்று, நாம் பாரம்பரியமாக சமையலுக்கு பயன்படுத்தும் இரும்பாலான சட்டி, கடாய், ஈயச்சொம்பு போன்ற பாத்திரங்கள். இந்த இரும்பு பாத்திரங்களில் சமைத்த உணவை உட்கொண்டு வந்ததாலேயே நம் முன்னோர்களுக்கு, இப்போது இருக்கிற மாதிரி ரத்தசோகை வந்ததில்லை.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது எண்ணெயின் அளவு மிகக் குறைவாகத்தான் தேவைப்படும். அதனால், கொழுப்பு சேராது என்று நினைத்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் PFOA (Perfluorooctanoic Acid) என்ற வேதிப்பொருள் தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவது இல்லை. எனவே, இந்த வகைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். லைப்போபுரோட்டீன் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

மாறாக, இரும்பு பாத்திரங்களில் சமைக்கும் நேரம் அதிகம் எடுத்துக் கொள்வதோடு, உணவின் ஊட்டச்சத்துக்களை வெளியேறாமல் தக்கவைத்துக் கொள்கிறது. உடல் வெப்பத்தை தணிக்கிறது. மேலும், சமைக்கும்போது, பாத்திரங்களில் இருக்கும் இரும்பு வெளிப்பட்டு, உணவில் கலந்து, நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதை ஆய்வும் உறுதிப்படுத்துகிறது. அதனால், வாரத்திற்கு 2, 3 முறையாவது இரும்பு சட்டியில் சமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், கூடுதலாக இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்காது.  

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .