Monday, August 1, 2011

கோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை !!!



இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் விலை மதிக்கமுடியாத பொருள், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும்


ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர் வைரம்.



இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும் எனில், “இதை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.



இந்த வைரம் முதன்முதலில் அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரால் ஆந்திராவில் இருந்து கண்டறியப்பட்டது. பின்னர் கில்ஜி மீது படையெடுத்து வந்த குவாலியர் மன்னன் விக்ரமஜித்திடம் தஞ்சம் புகுந்தது.



அதற்கு பிறகு இந்தியாவை மெல்ல ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்த பாபரை எதிர்த்து நின்றனர் இப்ராஹிம் லோடியும், குவாலியர் மன்னன் விக்ரமஜித்தும். இங்கு தான் ஆரம்பம் ஆனது புகழ்பெற்ற பானிபட் போர்.



போரில் விக்ரமஜித் மடிந்து விட அவனுடைய குடும்பம் ஆக்ரா அரண்மனையில் ஒளிந்தகொண்டிருந்தது. பாபர் மகன் ஹுமாயூன் ஆக்ரா நகரை கைப்பற்றியபோது அந்த குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அற்புதமான வைரத்தை ஹுமாயூனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள்.



பின்னர் ஹுமாயூனிடமிருந்து பாரசீக மன்னன் ஷா தாமஸ் கைக்கு மாறிய வைரம் மீண்டும் தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷா மூலம் இந்தியா வந்தது. அதைத் தொடர்ந்து 17-ம் நூற்றாண்டில் ஷாஜகான் மூலம் மீண்டும் மொஹலாயர்கள் வசம் வந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. கி.பி. 1739-ல்



டெல்லியை நாசம் செய்த பாரசீக மன்னன் நாதிர் ஷா வசம் போனது.. கோஹினூர் – அதாவது, “மலையளவு ஒளிவீச்சு” என்று பெயர் வைத்ததும் நாதிர் ஷாதான். பின்னர் சில காலம் அவருடைய வாரிசுகள் கையில் இருந்த வைரத்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தார்.



பின்னர் ஆங்கிலேயர்கள் வசம் பஞ்சாப் போன பின் சர். ஜான் லாரன்ஸ் என்ற அதிகாரியின் கைவசம் வந்தது. அவர் தன் கோர்ட் பாக்கெட்டில் போட்டு பீரோவில் மறந்து வைத்து விட்டார். ஆறு வாரங்கள் கழித்து பதறியடித்துப் போய் அதை எடுத்து விக்டோரியா மாகாராணிக்குப் பரிசளித்தார். அன்று முதல் இன்று வரை பிரிட்டிஷ் கிரீடத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறது இந்த கோஹினூர் வைரம்..

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .