Tuesday, July 26, 2011

பயமற்ற சூரியக் குளியல்…

10
மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு வரும் பலரும் கடற்கரையோரங்களில் குறைந்த பட்ச ஆடைகளோடு சூரிய ஒளிக் குளியலில் லயித்திருப்பது சகஜம்.
நமது நாட்டிலும் சூரியக் குளியல் மற்றும் சூரிய ஒளியில் ஓய்வு எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்கூடு.

இந்த சூரியக் குளியலில் பல்வேறு நன்மைகள் உண்டு. மிக முக்கியமான நன்மை வெயிலில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி. அதேபோல இந்த சூரியக் குளியலில் பல்வேறு தீமைகளும் உள்ளன. அவற்றில் முக்கியமானது “சன் பர்ன்” எனப்படும் வெப்பத்தினால் உடலில் தோல் சிவந்து போய் கொப்புளங்களோ, புண்களோ வருவது.

சிலருக்கு மிகவும் மிருதுவான தோல், விரைவில் சிவந்து போய்விடும். சிலருடைய தோல் வெப்பத்தை அதிகம் கிரகித்துக் கொள்ளும். இது தான் சூரியக் குளியல் நடத்துவோரின் மிகப்பெரிய சிக்கல்.
எவ்வளவு நேரம் வெயிலில் இருக்கலாம், எப்போது நிழலில் போகவேண்டும் ? போதுமான அளவு வெயிலில் இருந்து விட்டேனா என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே என கலங்கியிருந்த சூரியக் குளியல் பிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது இந்த புதிய கண்டுபிடிப்பு.

சின்ன ஒரு பிரேஸ்லெட் போன்ற இந்த மெல்லிய ஸ்டிரிப் ஒன்றை நமது கைகளில் கட்டிக் கொண்டால் நமது உடல் ஒத்துக் கொள்ளும் அளவுக்கு அதிகமான வெயில் தாக்கும் போது இந்த ஸ்ட்ராப் “பிங்க்” நிறமாக மாறிவிடுகிறதாம்.

வெயிலிலுள்ள புற ஊதாக்கதிர்களின் அளவைக் கிரகித்தும், நமது தோலின் தன்மையை அறிந்தும் இந்த கருவி செயல்படுகிறதாம்.

சூரிய வெப்பம் தாக்கிவிடுமோ எனும் பயத்தில் தேவையற்ற கிரீம்களை உடலில் பூசிக்கொள்வதோ, தேவையான அளவு வெயிலை ரசிக்க முடியாமல் போவதோ இதன் மூலம் முழுமையாக தவிர்க்கப்படும் என்பது சிறப்புச் செய்தியாகும்.

புற உதாக் கதிர்களின் தாக்கம் பல வகை தோல் புற்றுநோய்களுக்குக் கூட காரணமாகி விடுகிறது, இந்த எளிய ஸ்ட்ராப், நம்மை எச்சரிக்கை செய்வதன் மூலம் புற ஊதாக்கதிர்கள் அதிகமாய் தாக்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
மிகவும் மலிவாக, ஒரு சில ரூபாய்கள் எனும் விலையில் இந்தப் பொருள் விற்பனைக்கு வர இருக்கிறது.

கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் இந்த கண்டு பிடிப்புக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .